கடந்த வியாழன்(டிச., 26 இரவு)பீஹாரின் கைமூர் மாவட்டத்தில், கிராண்ட் டிராக் சாலையில் டிரக் சென்று கொண்டிருந்தது. இதில் 5 டன் வெங்காயம் மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மூட்டையும் 550 கிலோ வெங்காயம் இருந்தது. ஒரு கிலோ வெங்காயத்தின் உள்ளூர் மதிப்பு ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையானது. அப்போது, தேசிய நெடுஞ்சாலை- 2ல் டிரக் வந்த போது காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், வழிமறித்தது. துப்பாக்கி முனையில் டிரைவருடன் டிரக்கை, கடத்தி சென்றனர்.
பின்னர், டிரைவரை இறக்கிவிட்ட அந்த கும்பல் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் டிரக்கை நிறுத்துவோம் என சொல்லிவிட்டு சென்றனர். பின்னர் அந்த கும்பல், வெங்காயத்தை திருடி டிரக்கை மட்டும் நிறுத்திவிட்டு சென்றனர். சுமார் ஒரு கி.மீ., தூரம் நடந்து சென்ற டிரைவர், வெறும் டிரக் மட்டும் நிற்பதை கண்டார். இது குறித்து டிரைவர் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.