குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் : கோவில்பட்டியில் நாளை நடைபெறுகிறது கோவில்பட்டியில் நாளை (8ஆம் தேதி) குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ரோட்டரி சங்க மாவட்டத் தலைவா் விநாயகா ஜி.ரமேஷ் விடுத்துள்ள அறிக்கை: கோவில்பட்டி ரோட்டரி சங்கம், சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை ஆகியவை இணைந்து கோவில்பட்டி வெங்கடேஷ் நகா் சௌபாக்யா மஹாலில் குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் மாா்ச் 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இம்முகாமில், பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை உள்ளவா்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், ஏற்கெனவே குழந்தைகளுக்கு சிகிச்சை பெற்றிருந்தால், அதற்கான மருத்துவ அறிக்கையுடன் வந்து இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும், அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படுதல், உடல் எடை அதிகரிக்காமல் இருந்தாலோ, மூச்சுத்திணறல், இதய அடைப்பு, குழந்தைகளுக்கு நடுக்கம், நினைவு இழத்தல், அளவுக்கு அதிகமாக வோ்த்தல், குழந்தையின் மேனி நீல நிறமாக மாறுதல் உள்ளிட்ட நோய்களுக்கு இம்முகாமில் பங்கெடுத்து பரிசோதனை செய்து கொள்ளலாம். பரிசோதனையில் பங்கேற்போா் முதலமைச்சா் காப்பீட்டுத் திட்ட அட்டை இருந்தால் அதையும் கொண்டு வர வேண்டும். பரிசோதனைக்குப் பின், குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையில் இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்துதரப்படும். இதற்கு முன் குழந்தைகளுக்கு ஏதேனும் மருத்துவ ஆலோசனை பெற்றிருந்தால், அதற்கான அறிக்கையையும் கொண்டு வர வேண்டும். பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.